இந்தியா போட்டியில் 'காஷ்மீருக்கு நீதி' வாசகத்துடன் பறந்த விமானம்: ஐசிசி அதிருப்தி

ஆப்கானிஸ்தான் இடையிலான லீக் போட்டியின்போதும் ''பலுஸிஸ்தானுக்கு நீதி'' வேண்டும் என்ற வாசகத்துடன் விமானம் பறந்தது.
இந்தியா போட்டியில் 'காஷ்மீருக்கு நீதி' வாசகத்துடன் பறந்த விமானம்: ஐசிசி அதிருப்தி

2019 உலகக் கோப்பை போட்டித் தொடரில் இந்திய அணி இலங்கையுடன் மோதிய கடைசி லீக் ஆட்டத்தின் போது ''காஷ்மீருக்கு நீதி'' என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் மைதானத்தின் குறுக்கே விமானம் பறந்தது. 

இந்நிலையில், ''காஷ்மீரில் இந்தியா நடத்தும் இனப்படுகொலையை நிறுத்த வேண்டும்'', ''காஷ்மீருக்கு சுதந்திரம் தேவை'' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கொண்ட விமானங்களும் பறந்தன. அதுபோன்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையிலான லீக் போட்டியின்போதும் ''பலுஸிஸ்தானுக்கு நீதி'' வேண்டும் என்ற வாசகத்துடன் விமானம் பறந்தது.

இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றிருப்பது வருத்தத்துக்குரியதாக அமைந்துள்ளது. கிரிக்கெட் தொடர்களின் போது அரசியல் விவகாரங்களை ஐசிசி என்றுமே ஊக்குவித்தது கிடையாது. அதிலும் குறிப்பாக உலகக் கோப்பை போன்ற தொடர்களில் நடைபெற்ற இந்த சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குரியது. 

உலகக் கோப்பைத் தொடர் நடைபெறும் அனைத்து இடங்களிலும் எவ்வித அரசியல் போராட்டங்களும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே போலீஸிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. முதல்முறை இதுபோன்று நடைபெற்றபோதே நாங்கள் புகார் அளித்தோம். 

ஆனால், மறுபடியும் அதே விவகாரம் நடைபெற்றது, போலீஸாரின் நவடிக்கையில் திருப்திதரக்கூடியதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா பங்கேற்ற போட்டியின் போது நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே சர்வதேசக் கிரிக்கெட் கௌன்சிலிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com