ஓய்வு பெற்று விட்டதால் இனி அதற்கு இடையூறு இருக்க வாய்ப்பில்லை என நம்புவதாக நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்க யுவராஜ் சிங் (37), பிசிசிஐ-யிடம் அனுமதி கோரியிருந்தார். ஆனால், இந்திய கிரிக்கெட் அணியில் ஒப்பந்தமாக இருந்ததால் அதற்கு சிக்கல் நீடித்தது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவித்தார்.
இதையடுத்து டி20 லீக் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக பிசிசிஐ-க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,
வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வுபெற்றுவிட்டதால், இனியும் என்னை அனுமதிப்பதில் எந்த இடையூறுகளும், சிக்கல்களும், பிரச்னைகளும் இருக்காது என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வீரேந்திர சேவாக், ஜாகீர் கான் ஆகியோர் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி10 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதுபோன்று முதல்தர கிரிக்கெட் விளையாடி வந்தாலும், கரீபியன் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் இர்ஃபான் பதான் பங்கேற்கவுள்ளார். ஆனால், அவர் இதுகுறித்து பிசிசிஐ-யிடம் முறையான அனுமதி பெறவில்லை.
முன்னதாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்க யூசுப் பதான் கோரிய அனுமதியை பிசிசிஐ ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.