ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் உணவு விடுதியில் தகராறு செய்ததாக அங்கிருந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.
உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதியது. இதில் 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தப் போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாள் (ஜூன் 17) இரவு சுமார் 11:15 மணியளவில் மான்சஸ்டரின் லிவர்பூல் சாலையில் அமைந்துள்ள அக்பர் உணவு விடுதியில் ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்தவர்கள் தகராறு செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் விசாரணை நடத்தியபோது, தங்களை புகைப்படம் எடுக்க முயன்றவரை ஆப்கான் வீரர்கள் தடுத்து புகைப்படம் எடுக்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. கைகலப்பு எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று மான்சஸ்டர் போலீஸார் தெரிவித்தனர்.