இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் டீன் எல்கருக்கு மாற்று வீரராக டி புரூய்ன் களமிறங்கியுள்ளார்.
இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, இந்திய அணி ஃபாலோ ஆன் செய்ய அழைத்தது. இதன்படி, 335 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் திணறிய தென் ஆப்பிரிக்காவின் டாப் ஆர்டர் 22 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்நிலையில், 10-வது ஓவரில் உமேஷ் யாதவ் வீசிய பவுன்சரை எதிர்கொள்ள முடியாமல் திணறிய டீன் எல்கரை அதை ஹெல்மட்டில் வாங்கினார். இதனால், இவர் களத்திலேயே நிலைகுலைந்து போனார். இதையடுத்து, நடுவர்கள் தேநீர் இடைவேளை அறிவித்தனர்.
தொடர்ந்து, தேநீர் இடைவேளையில் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், அறிமுக ஆட்டக்காரர் ஜார்ஜ் லிண்டே தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஒரு விக்கெட் முன்னதாக களமிறங்கினார். இதையடுத்து, எல்கருக்குப் பதிலாக மாற்று வீரராக டி புரூய்ன் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டது. இவர் முதலிரண்டு ஆட்டங்களில் களமிறங்கிய நிலையில் 3-வது ஆட்டத்தில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது டீன் எல்கருக்கு மாற்று வீரராக 3-வது ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் அவர் களமிறங்கியுள்ளார்.