2011 உலகக் கோப்பை வரை தோனிக்கு என் மீது நம்பிக்கை இருந்தது என முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் யுவ்ராஜ் சிங் கூறியதாவது:
நான் இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றபோது கோலி எனக்கு ஆதரவாக இருந்தார். அவருடைய ஆதரவின்றி என்னால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்திருக்க முடியாது. 2019 உலகக் கோப்பை பற்றி தோனி தான் என்னிடம் சரியாகச் சொன்னார். தேர்வுக்குழுவினர் உங்களை வைத்து திட்டமிடவில்லை என்றார். சரியான நிலையை எனக்கு எடுத்துச் சொல்லி தெளிவுபடுத்தினார். தன்னால் என்ன முடியுமோ அதை அவர் செய்தார்.
2011 உலகக் கோப்பை வரை தோனிக்கு என் மீது நம்பிக்கை இருந்தது. அணியின் முக்கியமான வீரர் என என்னிடம் சொல்வார். ஆனால் உடல்நலக்குறைவிலிருந்து மீண்டு வந்த பிறகு அணியில் பல விஷயங்கள் மாறியிருந்தன. ஒரு கேப்டனாக உங்களால் எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியாது. ரெய்னா, ஜடேஜாவுக்கு தோனி ஆதரவளித்தார். ராகுலுக்கு கோலி ஆதரவளிக்கிறார். ஒவ்வொரு கேப்டனும் சில வீரர்களுக்கு ஆதரவளிப்பார்கள். புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பிறகு என் மீது நம்பிக்கை வைக்காததால் யாரையும் குறை சொல்ல மாட்டேன். என்னுடைய ஆட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவே சில காலமானது என்றார்.