பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20யில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 196 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. டாம் பேண்டன் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடி தொடக்கத்தைத் தந்தனர்.
இந்த நிலையில், இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தார் ஷதாப் கான். பேர்ஸ்டோவ் 24 பந்துகளில் 44 ரன்களும், பேண்டன் 16 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர்.
இதன்பிறகு, 3-வது விக்கெட்டுக்கு டேவிட் மலான் மற்றும் கேப்டன் இயான் மார்கன் இணைந்தனர். மார்கன் அதிரடியில் மிரட்ட, மலான் தொடக்கத்தில் நிதானம் காட்டினார்.
மார்கன் அரைசதத்தைக் கடக்க இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில் 33 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்த மார்கன் ஹாரிஸ் ரௌஃப் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 1 ரன்னில் ஆட்டமிழக்க, சாம் பில்லிங்ஸ் வந்த வேகத்தில் 2 பவுண்டரிகள் அடித்து 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
எனினும், மலான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.
இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.