இங்கிலாந்துடனான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஃபகார் ஸமான் அதிரடி தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில், ஸமான் முதலில் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த ஹபீஸும் அதிரடியாக ரன் குவிக்க பாகிஸ்தானின் ரன் ரேட் நல்ல நிலையில் இருந்து வந்தது. பாபர் அசாமும் டி20 கிரிக்கெட்டில் தனது 14-வது அரைசதத்தை அடித்தார்.
இதையடுத்து, 44 பந்துகளில் 56 ரன்களுக்கு அசாம் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, ஹபீஸ் ஆட்டத்தைக் கையிலெடுக்க சோயப் மாலிக் ஒத்துழைப்பு தந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த மாலிக் 11 பந்துகளில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இருந்தபோதிலும், ஹபீஸ் தொடர்ந்து அதிரடி காட்டி அரைசதத்தைக் கடந்தார்.
இதையடுத்து, கடைசி ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 69 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணித் தரப்பில் கிறிஸ் ஜோர்டன் மற்றும் டாம் கரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.