"சிட்னி மைதானத்தில் இரு டெஸ்டுகளை நடத்தத் தயார்'

தேவை ஏற்பட்டால் சிட்னி மைதானத்திலேயே இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரு டெஸ்ட் ஆட்டங்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக அந்த மைதானத்தின் நிர்வாகம் கூறியுள்ளது. 
"சிட்னி மைதானத்தில் இரு டெஸ்டுகளை நடத்தத் தயார்'
Updated on
1 min read


சிட்னி: தேவை ஏற்பட்டால் சிட்னி மைதானத்திலேயே இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரு டெஸ்ட் ஆட்டங்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக அந்த மைதானத்தின் நிர்வாகம் கூறியுள்ளது. 
டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம் மெல்போர்னில் 26-ஆம் தேதி தொடங்குகிறது. 3-ஆவது டெஸ்டை ஜனவரி 7 முதல் சிட்னியிலும், 4-ஆவது டெஸ்டை ஜனவரி 15 முதல் பிரிஸ்பேனிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில், சிட்னியில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு சமீபத்தில் தீவிரமாக அதிகரித்தாலும் தற்போது தாக்கம் குறைந்துள்ளது. எனினும், அச்சம் காரணமாக அந்த நகரம் அமைந்துள்ள நியூ செளத் வேல்ஸ் மாகாணத்துடனான தனது எல்லையை குயின்ஸ்லாந்து மாகாண நிர்வாகம் முடலாம் எனத் தெரிகிறது. 
குயின்ஸ்லாந்து மாகாணத்தில் தான் 4-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ள பிரிஸ்பேன் நகரம் உள்ளது. எனவே, அந்த மாகாண அரசு சிட்னியுடனான தொடர்பை துண்டிக்கும் பட்சத்தில், இரு அணி வீரர்கள், போட்டி ஒளிபரப்பு குழுவினர் உள்ளிட்டோர் சிட்னியிலிருந்து பிரிஸ்பேன் செல்ல இயலாது. 
இந்நிலையில், அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் இரு டெஸ்டுகளை நடத்தத் தயாராக இருப்பதாக சிட்னி மைதான அறக்கட்டளை தலைவர் டோனி ஷெபர்ட் கூறியுள்ளார். எனினும், 3-ஆவது டெஸ்டை திட்டமிட்டபடி சிட்னியில் நடத்துவதில் உறுதியாக இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. 
ஒருவேளை குயின்ஸ்லாந்து மாகாணம் தனது முடிவில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் 3-ஆவது டெஸ்டை சிட்னிக்குப் பதிலாக, மெல்போர்னில் நடத்துவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், 3-ஆவது டெஸ்ட்டை நடத்தும் வாய்ப்பை தாங்கள் இழக்க விரும்பவில்லை என்று சிட்னி மைதான அறக்கட்டளை தலைவர் டோனி ஷெபர்ட் கூறினார். 
ஐபிஎல் போட்டி முடிந்து ஆஸ்திரேலிய, இந்திய அணியினர் ஆஸ்திரேலியா வந்தபோது, 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் காலத்திலேயே அவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான அனுமதியை சுகாதார அதிகாரிகளிடம் பெற நியூ செளத் வேல்ஸ் அரசு கிரிக்கெட் வாரியத்துக்கு உறுதுணையாக இருந்ததை அவர் குறிப்பிட்டார். 
இதனிடையே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சு நடத்திவரும் குயின்ஸ்லாந்து மாகாண அரசு, தங்களது மக்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்றும், எல்லையை மூடும் முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்றுமே கூறிவருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின. 
இத்தகைய சூழலில் ஆஸ்திரேலிய வாரியத்தின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com