மேலும் 7 பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா உறுதி

பாகிஸ்தானில் புதிதாக 7 கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் புதிதாக 7 கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. (கோப்புப்படம்)
பாகிஸ்தானில் புதிதாக 7 கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. (கோப்புப்படம்)


புதிதாக 7 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூன் 28-ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவுகள் முதற்கட்டமாக நேற்று (திங்கள்கிழமை) வெளியாகின. இதில் ஹைதர் அலி, ஹாரிஸ் ரௌஃப் மற்றும் ஷதாப் கான் ஆகிய 3 வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆனால், அவர்களுக்கு அறிகுறி ஏதும் காணப்படவில்லை. இமாத் வாசிம் மற்றும் உஸ்மான் ஷென்வாரி ஆகியோருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.

இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 7 வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி வாசிம் கான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:

"இது மிகவும் சிறந்த சூழ்நிலை அல்ல. கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 10 பேரும் முழு உடற்தகுதியுடன் இருக்கும் இளம் விளையாட்டு வீரர்கள். அவர்களுக்கே தொற்று ஏற்படுகிறது என்றால், யாருக்கு வேண்டுமானாலும் இது ஏற்படலாம். வீரர்களும், நிர்வாகிகளும் லாகூரில் கூடவுள்ளனர். அவர்களுக்கு ஜூன் 25-ஆம் தேதி 2-ஆம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கு அடுத்த நாள், இங்கிலாந்து தொடருக்கான புதிய அணி அறிவிக்கப்படும்.

இது பிரச்னைக்குரிய விஷயம் என்றாலும், அச்சப்படத் தேவையில்லை. போதிய நேரம் உள்ளது. இங்கிலாந்து சென்ற பிறகும் வீரர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்." என்றார்.

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள்:

நேற்று

1. ஷதாப் கான்
2. ஹைதர் அலி
3. ஹாரிஸ் ரௌஃப்

இன்று

4. காஷிஃப் பாத்தி
5. முகமது ஹஸ்னைன்
6. ஃபகார் ஸமான்
7. முகமது ரிஸ்வான்
8. இம்ரான் கான்
9. முகமது ஹஃபீஸ்
10. வஹாப் ரியாஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com