விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து குறித்து பிரபல விளையாட்டு வீரர்கள் தங்களுடைய வருத்தங்களைப் பதிவு செய்துள்ளார்கள்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வெங்கடாபுரத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலை உள்ளது. இன்று அதிகாலை தொழிற்சாலையில் உள்ள நிலுவை கொள்கலனிலிருந்து பாலீஸ்ட்ரின் தயாரிக்க பயன்படுத்தும் ஸ்ட்ரீன் என்ற வேதி வாயு கசியத் துவங்கியது. இந்த விஷவாயு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5.கி.மீ துாரம் வரை காற்றில் பரவியது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மயக்கமடைந்தனர்.
விஷவாயுவைச் சுவாசித்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்கள். மூச்சுத்திணறல் ஏற்பட்ட பலர் 25 ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். தற்போது வரை ஆயிரம் பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
விஷவாயு விபத்துக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விஷவாயு விபத்துக்குப் பிரபல விளையாட்டு வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
துரதிர்ஷ்டவசமான விபத்து. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை எண்ணி வருந்துகிறேன் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.
இப்போது விஷவாயு விபத்தா? கடவுளே! விடியோ காட்சிகள் தொந்தரவு செய்கின்றன. கொஞ்சம் கருணை காட்டு கடவுளே என்று ஆர். அஸ்வின் கூறியுள்ளார்.
விஷவாயு விபத்தின் காட்சிகள் இதயத்தை பிளந்து விடுகின்றன பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை எண்ணி வருந்துகிறேன் என்று பி.வி. சிந்துவும் வேதனை தரக்கூடிய விபத்து இது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மனவலிமை கிடைக்கவேண்டும் என்று சாய்னா நெவாலும் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.