

ஓய்வு பெற யோசித்துக்கொண்டிருக்கும்போது 2017-ல் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றேன். இது எனக்கு மிகவும் திருப்தியளித்தது எனக் கூறியுள்ளார் பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.
கரோனா ஊரடங்கு காரணமாக ஜெர்மனியில் மாட்டிக்கொண்டுள்ளார் ஆனந்த். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு இணையம் வழியாக அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
செஸ் போட்டியில் செஸ் போர்டை விடவும் எதிர்முனையில் உள்ள வீரரை வீழ்த்துவதுதான் முக்கியம். நாம் சிறந்த நகர்த்தல்களைத்தான் செய்துள்ளோம் எனப் பலரும் எண்ணுவார்கள். ஆனால் எல்லாமே நீங்கள் செய்யும் கடைசிப் பிழையில் தான் அடங்கியுள்ளது. எதிராளி என்ன யோசிக்கிறார் என்று எண்ணியபடி தான் உங்கள் நகர்த்தலை செய்ய வேண்டும். செஸ் ஆட்டத்தில் உணர்ச்சிவசப்பட முடியாது. செஸ் ஆடிய பிறகு நேராக உடற்பயிற்சிக் கூடத்துக்குத்தான் செல்வேன். உடற்தகுதியை மேம்படுத்துவதற்காக அல்ல, மன அமைதி பெறுவதற்காக. இதன்மூலம் மன இறுக்கம் குறையும்.
1987-ல் உலக ஜூனியர் போட்டியை முதல் முதலாக வென்றேன். இந்த வெற்றியை மறக்கவே முடியாது. ரஷிய வீரர்களைத் தோற்கடித்தது பெருமையாக இருந்தது. அதன்பிறகு, ஓய்வு பெற யோசித்துக்கொண்டிருக்கும்போது 2017-ல் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றேன். இது எனக்கு மிகவும் திருப்தியளித்தது. இந்த இரு வெற்றிகளும் என் வாழ்க்கையில் முக்கியமானவை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.