பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு முன்னாள் வீரர்கள் அஜித் அகர்கர், மனிந்தர் சிங் போன்றோர் விண்ணப்பித்துள்ளார்கள்.
பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினா்களான ஜதின் பராஞ்சிபே, சரண்தீப் சிங், தேவன் காந்தி ஆகியோா் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து இருவருக்குப் பதிலாக புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களை பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளது.
இதையடுத்து தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு முன்னாள் வீரர்கள் அஜித் அகர்கர், சேத்தன் சர்மா, மனிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ், அபே குருவில்லா ஆகியோர் விண்ணப்பம் செய்துள்ளார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வங்காள வீரர் ரனதீப் போஸும் விண்ணப்பித்துள்ளார். அவர் 91 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், உறுப்பினா் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களைக் கடந்த மார்ச் மாதம் தேர்வு செய்தது பிசிசிஐ. ஜதின் பராஞ்சிபே, சரண்தீப் சிங், தேவன் காந்தி, மற்றும் கடந்த மார்ச் மாதம் தேர்வான ஹர்விந்தர் சிங் ஆகியோரை விடவும் அதிக டெஸ்டுகளில் விளையாடியதால் கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் சுனில் ஜோஷி, தேர்வுக்குழுத் தலைவராகத் தேர்வானார். புதிய தோ்வுக் குழு உறுப்பினா்களை மதன்லால், ஆா்.பி.சிங், சுலக்ஷணா நாயக் ஆகியோா் அடங்கிய சிஏசி தேர்வு செய்தது.
இந்நிலையில் புதிய தேர்வுக்குழு உறுப்பினராக அகர்கரோ மனிந்தர் சிங்கோ தேர்வானால் இருவரில் ஒருவருக்கு தேர்வுக்குழுத் தலைவர் பதவி வழங்கப்படும். ஏனெனில் சுனில் ஜோஷியை விடவும் இருவரும் அதிக டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்கள். சுனில் ஜோஷி 15 டெஸ்டுகளிலும் மனிந்தர் சிங் 35 டெஸ்டுகளிலும் அகர்கர் 26 டெஸ்டுகளிலும் விளையாடியுள்ளார்கள். பிசிசிஐயின் புதிய விதிமுறைப்படி அதிக டெஸ்டுகளில் விளையாடிய தேர்வுக்குழு உறுப்பினரே தலைவராகத் தேர்வு செய்யப்படுவார்.
புதிய தேர்வுக்குழுவுக்கு அடுத்ததாக மூன்று ஐசிசி போட்டிகளுக்கான இந்திய அணியைத் தேர்வு செய்கிற பொறுப்பு வழங்கப்படும். 2021-ல் இந்தியாவிலும் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவிலும் டி20 உலகக்கோப்பை நடைபெறுகிறது. 2023-ல் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும்.