லார்ட்ஸ் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தில் தேநீர் இடைவேளைக்கு முந்தைய கடைசி பந்தில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தி இஷாந்த் சர்மா அசத்தினார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களும் இங்கிலாந்து 391 ரன்களும் எடுத்தன.
27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, கடைசி நாளில் குறைந்தபட்சம் 60 ஓவர்கள் வீசப்படவுள்ள நிலையில் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
முதலிரண்டு ஓவர்களில் ரோரி பர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி விக்கெட்டை முறையே ஜாஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி வீழ்த்தினர்.
இதையடுத்து சற்று தாக்குப்பிடித்து விளையாடிய ஹசீப் ஹமீதை (9) தனது முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. ஜோ ரூட் மட்டுமே நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். பேர்ஸ்டோவ் நிதானத்தைக் கடைப்பிடித்தார்.
தேநீர் இடைவேளைக்கு முந்தைய கடைசி பந்தில் பேர்ஸ்டோவை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் இஷாந்த் சர்மா.
தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு மழை, வெளிச்சமின்மை தடை இல்லாமல் இருந்தால் குறைந்தபட்சம் 38 ஓவர்கள் வரை வீசப்படும் எனத் தெரிகிறது.