இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல்நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி 78 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இதனையடுத்து மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று (ஆக. 25) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா அதிகபட்சமாக 19 ரன்களை எடுத்தார். அதற்கு அடுத்தபடியாக ரஹானே 18 ரன்களை எடுத்தார்.
மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.
இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், ஓவெர்டன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ராபின்சன், சா கரண் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.