இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க மகளிர் அணி டிஎல்எஸ் முறையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
லக்னெளவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. பூணம் ராவுத் 77 ரன்களும் கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மண்ப்ரீத் கெளர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 36 ரன்களும் எடுத்தார்கள்.
36 ரன்களை எடுத்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் மிதாலி ராஜ். சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த 2-வது வீராங்கனை மற்றும் முதல் இந்திய வீராங்கனை ஆகிய பெருமைகளை அவர் பெற்றுள்ளார்.
இதன்பிறகு விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது டிஎல்எஸ் முறையில் தென் ஆப்பிரிக்க அணி முன்னணியில் இருந்ததால் 3-வது ஒருநாள் ஆட்டத்தை அந்த அணி டிஎல்எஸ் முறையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தொடக்க வீராங்கனை லிஸ்லி லீ கடைசிவரை ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 4-வது ஒருநாள் ஆட்டம், ஞாயிறன்று லக்னெளவில் நடைபெறவுள்ளது.