இந்திய ஏ அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஏ 509 ரன்கள் குவிப்பு

இந்திய ஏ அணி, 2-ம் நாள் முடிவில் 33 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
பிரியங் பஞ்சால்
பிரியங் பஞ்சால்

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணியில் டெஸ்ட் வீரர் விஹாரி, தமிழக வீரர் பாபா அபரஜித் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

முதல் நாளன்று தெ.ஆ. ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்தது. கேப்டன் பீட்டர் மலான் 157 ரன்களுடனும் ஜேசன் ஸ்மித் 51 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்நிலையில் தெ.ஆ. ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 135.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 509 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பீட்டர் மலான் 163 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய வீரர்களில் சைனி, அர்ஸான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதன்பிறகு விளையாட ஆரம்பித்த இந்திய ஏ அணி, 2-ம் நாள் முடிவில் 33 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. பிரியங் பஞ்சால் 45, அபிமயூ ஈஸ்வரன் 27 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com