நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட பல வீரர்கள் தகுதிச்சுற்றைக் கூட தாண்டாமல் வெளியேறினர் . ஒரு சிலர் மட்டுமே இறுதிச் சுற்றுவரை முன்னேறி போராடி வெண்கலப்பதக்கங்கள் மற்றும் ஒரே ஒரு வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றனர். இந்தனை பெரிய நாட்டில் ஒரு தங்கப்பதக்கம் வாங்குவதற்குக் கூட ஆள் இல்லையா? என்கிற கேள்வி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின் இறுதியாக தடகளப் போட்டிகளில் ஒன்றான 'ஈட்டி எறிதலில்' இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியதுடன் இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடத்தை தக்கவைத்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதையும் படிக்க | அடுத்த இலக்கு உலக சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா
நாட்டிற்கு முதல் தங்கம் என்பதால் நீரஜை அனைத்து தரப்பினரும் கொண்டாடித் தீர்த்தனர். பல மாநிலங்களில் ஒவ்வொரு பகுதியிலும் சிலர் தாங்களாக முன்வந்து வெற்றியைக் கொண்டாடும் விதமாக சில உணவுப் பொருட்களை இலவசமாக கொடுத்தனர்.
தற்போது , குஜராத் மாநிலம் பரூக் மாவட்டத்தில் நேத்ரங் நகரத்தில் அமைந்திருக்கும் பெட்ரோல் பங்க்கில் 'நீரஜ்' என முதல் பெயராக ஆரம்பிக்கும் நபர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கி வருகிறார்கள்.
இதுவரை 28 பேர் இந்த இலவச பெட்ரோலை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் வழங்கப்பட்ட பெட்ரோலின் மதிப்பு ரூ.501 என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.