கே.எல். ராகுல் அவுட்: இந்தியா உணவு இடைவேளையில் 34/1

ரோஹித் சர்மா 25 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
கே.எல். ராகுல் அவுட்: இந்தியா உணவு இடைவேளையில் 34/1

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி 3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் மூன்றாவது ஆட்டம் புதன்கிழமை தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் சா்மா மட்டுமே அதிகபட்சமாக 19 ரன்களை சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் ஆண்டா்சன், ஓவா்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ராபின்சன், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 129 ஓவா்களில் 423/8 ரன்களை எடுத்தது. ஓவா்டன் 24 ரன்களுடனும் ராபின்சன் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தார்கள். கேப்டன் ரூட், 165 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து அசத்தினார். 

3-ம் நாளில் இந்திய அணி மீதமுள்ள இரு விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தியது. ஷமி பந்துவீச்சில் ஓவர்டன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆலி ராபின்சன், ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்தில் போல்ட் ஆனார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியத் தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணி 3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 19 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 25 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி 320 ரன்கள் பின்தங்கியுள்ளது.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com