இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவைத் தேர்வுக் குழு நியமித்துள்ளது.
அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணியை வழிநடத்தி வந்த விராட் கோலி கடந்த டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் பொறுப்பிலிருந்தும் அவர் விலகினார்.
இதைத் தொடர்ந்து, டி20 கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
எனினும், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு இரண்டு வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது திட்டங்கள் மற்றும் வியூகங்கள் வகுப்பதில் சிக்கலை உண்டாக்கும் என்ற பேச்சுகள் எழுந்து வந்தன. தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு ரோஹித் சர்மாவே கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மாவையே தேர்வுக் குழு கேப்டனாக நியமித்துள்ளது.