சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணி விஜய் சங்கர் தலைமையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. அணியில் 3 புது முகங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாஷிங்டன் சுந்தர் துணை கேப்டனாக இருக்கும் இந்த அணியில், புது முகங்களாக பெளலர்கள் சிலம்பரசன், சரவண குமார் ஆகியோருடன் பேட்டர் சாய் சுதர்சன் இணைந்திருக்கிறார்.
அணியின் பேட்டிங் வரிசையானது அபராஜித், இந்திரஜித், ஜெகதீசன், கெளஷிக் காந்தி, ஷாருக் கான், விஜய் சங்கர் ஆகியோருடன் வலுவானதாக இருக்கிறது. பெளலிங்கில் சுழற்பந்துவீச்சுக்கு வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், சித்தார்த், அபராஜித் ஆகியோரும், வேகப்பந்துவீச்சுக்கு சந்தீப் வாரியர், முகமது, சிலம்பரசன், அஸ்வின் கிறிஸ்ட் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.
தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் ஜனவரி 13-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரை சந்திக்கிறது. போட்டி முழுவதும் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது.
அணி விவரம்: விஜய் சங்கர் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், பி.இந்திரஜித், பி.அபராஜித், என்.ஜெகதீசன், எம்.ஷாருக் கான், பி.சாய் சுதர்சன், பிரதோஷ் ரஞ்சன் பால், எல்.சூர்யபிரகாஷ், எம்.கெளஷிக் காந்தி, வி.கங்கா ஸ்ரீதர் ராஜூ, சந்தீப் வாரியர், எம்.முகமது, ஆர்.சிலம்பரசன், பி.சரவணகுமார், ஏ.அஸ்வின் கிறிஸ்ட், எல்.விக்னேஷ், ஆர்.சாய் கிஷோர், எம்.சித்தார்த், ஆர்.கவின்.