இந்திய அணியை விடவும் ஐபிஎல் அணிக்கு சில வீரர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று முன்னாள் வீரர் கபில் தேவ் விமர்சனம் செய்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நமீபியாவுக்கு எதிராகத் தனது கடைசி லீக் ஆட்டத்தை விளையாடுகிறது கோலி தலைமையிலான இந்திய அணி. ஞாயிறன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி. இதனால் இந்திய அணியின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது.
இந்நிலையில் இந்திய அணிக்காக விளையாடுவதை விடவும் ஐபிஎல் போட்டிக்கு சில வீரர்கள் முக்கியத்துவம் தருவதாக முன்னாள் வீரர் கபில் தேவ் விமர்சனம் செய்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
இந்திய அணிக்காக விளையாடுவதை விடவும் ஐபிஎல் போட்டிக்கு சில வீரர்கள் முக்கியத்துவம் தந்தால் நாம் என்ன செய்யமுடியும்? நாட்டுக்காக விளையாடுவதில் வீரர்கள் பெருமைகொள்ள வேண்டும். அவர்களுடைய பொருளாதார நிலவரம் பற்றி எனக்குத் தெரியாது. அதனால் மேலும் எதுவும் கூற முடியாது. ஆனால் முன்னுரிமை இந்திய அணிக்குத் தரப்படவேண்டும். அதன்பிறகுதான் ஐபிஎல் அணி. இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டாம் என நான் கூறவில்லை.
கிரிக்கெட் ஆட்டங்களை முறைப்படுத்துவது பற்றி பிசிசிஐ திட்டமிடவேண்டும். இந்தப் போட்டியின்போது செய்த தவறை மீண்டும் செய்யவேண்டாம். இது நமக்கு ஒரு பாடம். வருங்காலத்துக்காக இப்போதே திட்டமிட வேண்டும். உலகக் கோப்பைப் போட்டியில் தோல்வியடைந்ததால் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிர்காலம் இல்லை என்று அர்த்தமில்லை. சரியாகத் திட்டமிடுங்கள். ஐபிஎல் போட்டிக்கும் உலகக் கோப்பைப் போட்டிக்கும் இடையே தகுந்த இடைவெளி இருக்கவேண்டும் என்றார்.