சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தோல்வி நிலையிலிருந்து தப்பி வந்து வெற்றி பெற்றார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.
ஓபன், மகளிர் என இரு பிரிவிலும் இந்திய அணியினர் இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். ஓபன் பிரிவில் மூன்று இந்திய அணிகளும் நேற்று வெற்றி பெற்றன. பிரக்ஞானந்தா இடம்பெற்றுள்ள இந்தியா பி அணி ஸ்விட்சர்லாந்தை 4-0 என வென்றது. ஓபன் பிரிவில் மற்ற இரு இந்திய அணிகளும் 3-1 என வென்றன.
16 வயது பிரக்ஞானந்தா 45 வயது ஸ்விட்சர்லாந்து வீரர் யானிக்கை எதிர்கொண்டார். ஆட்டத்தில் பெரும்பாலும் பலவீனமான நிலையில் இருந்ததால் இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தோற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து போராடினார் பிரக்ஞானந்தா. இதனால் வெற்றிக்கான வழியைச் சரியாக அடைய முடியாமல் யானிக் தடுமாறினார். கடைசியில் நேரம் முடிந்துபோனதால் எதிர்பாராதவிதமாகத் தோற்றுப் போனார் யானிக். தோல்வி பெறும் நிலையிலிருந்த பிரக்ஞானந்தா தொடர்ந்து போராடியதால் கடைசியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஆட்டம் முடிந்த பிறகு பிரக்ஞானந்தா கூறியதாவது: நான் மோசமாக விளையாடினேன். இந்த வெற்றிப் புள்ளி எனக்கு எந்த மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. மோசமான நிலையில் ஆட்டம் முழுக்கத் தடுமாறினேன், டிரா செய்யவே நினைத்தேன். அவருக்காக (யானிக்) வருத்தப்படுகிறேன் என்று வெளிப்படையாகப் பேசினார்.
இதையும் படிக்க: நாங்கள் சரியாக விளையாடினால் பதக்கத்தை வெல்லுவோம்: பிரக்ஞானந்தா