100வது டி-20 போட்டியில் இன்று விளையாடுகிறார் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 100வது சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளார்.
ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. அதனைத் தொடர்ந்து இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே பாகிஸ்தான் - இந்தியா அணிகள் மோதுகின்றன.
கடந்த 2021 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். இதனால் தொடக்க சுற்றோடு இந்திய அணி வெளியேற நோ்ந்தது. அதன் பின் இரு அணிகளும் தற்போது நேரடியாக மோதுகின்றன.
இந்த ஆட்டம் விராட் கோலிக்கு 100வது டி-20 ஆட்டம். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அதிரடி ஆட்டத்தில் விராட் கோலி சோபிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 100வது டி-20 ஆட்டம் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதன் மூலம் ஒருநாள், டெஸ்ட், டி-20 என அனைத்து சர்வதேசப் போட்டிகளிலும், 100 ஆட்டங்கள் விளையாடிய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறவுள்ளார்.
இதேபோன்று, பாகிஸ்தான் அணியில் அந்த அணியின் கேப்டன் பாபா் ஆஸமின் ஆட்டத்திலும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.