உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆர்ஜென்டீனா நாட்டில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன.
1978, 1986-க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது. மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. 1962-க்குப் பிறகு அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை வென்ற அணி என்கிற பெருமையைப் பெறுவதற்காக பிரான்ஸ் கடுமையாக முயன்றது. இறுதியில் பெனால்டியில் தோற்றுப் போனது. உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்களை அடித்த 2-வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார் பிரான்ஸின் எம்பாப்பே. பரிசளிப்பு விழாவில் தங்கக் காலணி விருது எம்பாப்பேவுக்கு வழங்கப்பட்டது. போட்டியின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வானார்.
இந்நிலையில் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆர்ஜென்டீனா நாட்டில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் காலை வேளையில் சொந்த நாட்டுக்குத் திரும்பிய ஆர்ஜென்டீனா வீரர்கள், பியூனஸ் ஏர்ஸில் உள்ள நினைவுக்கூடத்தின் அருகே ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள்.