கோயம்புத்தூரில் நடைபெறும் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழகத்துக்கு எதிராக ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்துள்ளது.
2022-23 ரஞ்சி கோப்பை போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தை டிரா செய்த தமிழக அணி, 3 புள்ளிகளைப் பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆந்திராவை எதிர்கொள்கிறது.
தமிழ்நாடு - ஆந்திரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் கோயம்புத்தூர் எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆந்திர அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார்.
32 வருடங்கள் கழித்து கோயம்புத்தூரில் ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெறுகிறது. கடந்த வருடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரு டெஸ்டுகள் நடைபெற்றபோது ஆடுகள வடிவமைப்பாளராக இருந்த ரமேஷ் குமார், இந்த மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளராகச் செயல்படுகிறார்.
முதல் நாளன்று ஆந்திர அணி, 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களுடன் நல்ல நிலைமையில் இருந்தது. ஆனால் இன்று மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் 20 ரன்களுக்கு வீழ்த்தி அசத்தியது தமிழக அணி. ஆந்திரா முதல் இன்னிங்ஸில் 100.1 ஓவர்களில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் அபிஷேக் ரெட்டி அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார். சாய் கிஷோர், சந்தீப் வாரியர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 19 ஓவர்களில் 1விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.