பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு வாரியத்தில் 2003-04-ல் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார். ரமீஸ் ராஜா - 57 டெஸ்டுகள், 198 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
2004-ல் இந்தியா பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ததற்கு ரமீஸ் ராஜா முக்கியக் காரணமாக இருந்தார். அதேபோல பல வருடங்களுக்குப் பிறகு 2022-ல் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ததிலும் ரமீஸ் ராஜாவின் பங்களிப்பு மிக அதிகம். எனினும் இங்கிலாந்துக்கு எதிராக 0-3 என முழுமையாகத் தோற்ற பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 4 டெஸ்டுகளிலும் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து ரமீஸ் ராஜாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க நஜம் சேதி தலைமையிலான 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்களான ஷாஹித் அஃப்ரிடி, சனா மிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.