ஐபிஎல் போட்டியில் இம்பாக்ட் வீரர்: விதிமுறைகள் சொல்வது என்ன?

ஐபிஎல் போட்டியில் அடுத்த ஆண்டு முதல் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.
ஐபிஎல் போட்டியில் இம்பாக்ட் வீரர்: விதிமுறைகள் சொல்வது என்ன?

ஐபிஎல் போட்டியில் அடுத்த ஆண்டு முதல் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. 

இந்தாண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது பிசிசிஐ. ஒவ்வொரு அணியும் ஆட்டத்துக்கு முன்பு வழக்கமாகக் கொடுக்கப்படும் 11 வீரர்களின் பெயர்களோடு 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் 14-வது ஓவர் முடியும் முன்பு இம்பாக்ட் வீரரை அணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். 

இந்நிலையில் 2023 ஐபிஎல் போட்டியில் இம்பாக்ட் வீரருக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம். அந்த விதிமுறையில் உள்ள முக்கிய அம்சங்கள்:

ஒவ்வொரு அணியும் கூடுதலாக 4 வீரர்களின் பெயர்களை டாஸின் போது வெளியிட வேண்டும். இந்த நான்கு வீரர்களில் ஒருவர் இம்பாக்ட் வீரராகப் பங்கேற்கலாம். 4 வீரர்களும் இந்திய வீரர்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

மாற்று வீரரை எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம். யாருக்குப் பதிலாக மாற்று வீரர் உள்ளே நுழைகிறாரோ அந்த வீரர் இனிமேல் ஆட்டத்தில் எவ்விதத்திலும் பங்கேற்க முடியாது. ஒருவேளை ஓர் அணியில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் இருந்தால் மாற்று வீரராக வெளிநாட்டு வீரரைத் தேர்வு செய்துகொள்ளலாம். 

மாற்று வீரர் அணியில் இடம்பெற்றாலும் 11 பேர் மட்டுமே பேட்டிங் செய்ய முடியும். 

பந்துவீச்சில் அந்த நிலைமை இல்லை. உதாரணத்துக்கு மும்பையின் பும்ரா முதலிலேயே 4 ஓவர்களை வீசி விடுகிறார். எனில் அவரை வெளியேற்றி விட்டு புதிய பந்துவீச்சாளரைக் களமிறக்கலாம். அவரும் 4 ஓவர்களை வீசலாம். இதனால் பந்துவீச்சிலும் அணிகளுக்கு இந்தப் புதிய விதிமுறை நிறைய பலன்களைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2005, 2006-ம் ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் சூப்பர் சப் விதிமுறை பயன்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட ஒரு வீரருக்குப் பதிலாக இன்னொருவரைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால் அந்த பேட்டர் ஆட்டமிழந்துவிட்டால் சூப்பர் சப் வீரரால் பேட்டிங் செய்ய முடியாது. அதேபோல ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாகக் களமிறங்கினால் அந்த வீரர் எவ்வளவு ஓவர்களை வீசி முடித்துள்ளாரோ அதிலிருந்து மீதமுள்ள ஓவர்களை மட்டுமே சூப்பர் சப் வீரரால் வீச முடியும். 

ஆஸ்திரேலியாவின் பிபிஎல் போட்டியில் எக்ஸ் ஃபேக்டர் என்கிற ஒரு விதிமுறை அமலில் இருந்தது. தங்களுடைய அணியில் உள்ள 11 பேரில் ஒருவருக்குப் பதிலாக மாற்று வீரரை ஆட்டத்தின் பாதியில் அதாவது 10-வது ஓவரில் அதுவும் முதல் இன்னிங்ஸில் சேர்த்துக்கொள்ளலாம். எந்த வீரருக்குப் பதிலாக மாற்று வீரர் உள்ளே வருகிறாரோ, அந்த வீரர் பேட்டிங், பந்துவீச்சில் ஒரு ஓவருக்கு மேல் ஈடுபட்டிருக்கக் கூடாது. 

ஐபிஎல் போட்டியில் அணிகளுக்கு பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கூடுதலாக ஒரு வீரர் கிடைத்தால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்! டாஸ், ஆடுகளத்தின் தன்மை போன்றவற்றால் அணிகள் பெரிதாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க இம்பாக்ட் வீரர் உதவுவார். அதேபோல ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டாலும் இந்த வசதி பெரிதும் பயன்படும். ஓர் அணி ஓர் ஆட்டத்தில் ஒரு இம்பாக்ட் வீரரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com