நடுவரை அச்சுறுத்தும் விதத்தில் மோசமாக நடந்துகொண்டதற்காக ஏடிபி 500 மெக்ஸிகன் ஓபன் போட்டியிலிருந்து பிரபல வீரர் ஸ்வெரவ் நீக்கப்பட்டுள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த 24 வயது டென்னிஸ் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ். தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ளார். 19 ஏடிபி டென்னிஸ் போட்டிகளை வென்றுள்ளார். 2020 யு.எஸ். ஓபன் போட்டியில் 2-ம் இடம் பிடித்தார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார்.
மெக்ஸிகோவில் நடைபெற்று வரும் ஏடிபி 500 மெக்ஸிகன் ஓபன் போட்டியின் இரட்டையர் போட்டியில் பிரேஸிலைச் சேர்ந்த மெலோவுடன் இணைந்து பங்கேற்றார் ஸ்வெரவ். 6-2, 4-6, 10-6 என முதல் சுற்றில் இருவரும் தோற்றார்கள்.
இந்த ஆட்டத்தில் நடுவர் ஒரு தவறான முடிவை அறிவித்தார் என்று அவர் மீது கோபமாக இருந்தார் ஸ்வெரவ். 8-6 என டை பிரேக்கரில் இருந்தபோது நடுவர் அறிவித்த முடிவை ஸ்வெரவ் ஏற்கவில்லை. இதனால் ஆட்டம் முடிந்த பிறகு போட்டியாளர்களிடம் கைகுலுக்கிவிட்டு வந்த ஸ்வெரவ், திடீரென தனது ராக்கெட்டால் நடுவர் அமர்ந்திருந்த இருக்கையை ஓங்கி பலமுறை அடித்தார். நடுவரை அச்சுறுத்தும் விதமாக இருக்கையை ஓங்கி அடித்ததால் பாதுகாப்பு கருதி உடனடியாக அங்கிருந்து வெளியேறினார் நடுவர். நடுவரிடம் கோபமாகப் பேசி அவரை மிரட்டும் விதத்தில் நடந்துகொண்டார் ஸ்வெரவ். அரங்கில் இந்தப் பரபரப்பான சம்பவத்தைப் பார்த்த ரசிகர்கள் கரகோஷம் செய்தார்கள்.
ஸ்வெரவின் இந்த மோசமான செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து ஏடிபி 500 மெக்ஸிகன் ஓபன் போட்டியில் இருந்து ஸ்வெரவ் நீக்கப்பட்டுள்ளார்.