விம்பிள்டன் தடையைத் தவிர்ப்பதற்காகக் குடியுரிமையை மாற்றிக்கொண்டுள்ளார் ரஷியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை நடேலா ஸலாமிட்ஸே.
இந்த வருட விம்பிள்டன் போட்டி ஜூன் 27 அன்று தொடங்குகிறது. விம்பிள்டன் போட்டியில் ரஷிய, பெலாரஸ் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போரில் ஈடுபடும் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விம்பிள்டன் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்நிலையில் ரஷியாவின் மாஸ்கோவில் பிறந்தவர் நடேலா ஸலாமிட்ஸே. இரட்டையர் பிரிவில் இரு டபிள்யூடிஏ டூர் பட்டங்களை வென்றுள்ளார். தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ளார்.
ரஷிய வீரர்களுக்கு விம்பிள்டன் போட்டியில் அனுமதி மறுக்கப்படுவதால் வேறுவழியில்லாமல் தனது குடியுரிமையை ஜார்ஜியாவுக்கு மாற்றிக்கொண்டுள்ளார் 29 வயது நடேலா. சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில் எந்த நாட்டையும் சேராதவராகப் பொதுவான கொடியின் கீழ் தனது பெயரைப் பதிவு செய்து விளையாடினார். தற்போது விம்பிள்டன் போட்டியில் ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்தவராகத் தனது பெயரைப் பதிவு செய்து மகளிர் இரட்டையர் பிரிவில் செர்பிய வீராங்கனையுடன் இணைந்து விளையாடவுள்ளார்.
இந்நிலையில் நடேலாவின் முடிவில் தங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என விம்பிள்டன் நிர்வாகம் அறிவித்துள்ளது.