இந்திய அணி கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவரால் இந்திய அணியினருடன் சேர்ந்து இங்கிலாந்துக்கு பயணம் செய்ய முடியவில்லை.
இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கடந்தாண்டி கோவிட் தொற்றால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது அந்த தொடரை நிறைவு செய்ய இந்திய அணி லண்டனுக்குச் சென்றிருக்கிறது. இந்தத் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் ரவி அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அவரைத் தவிர்த்து இந்திய அணியினர் இங்கிலாந்துக்கு பயணித்துள்ளனர்.
“அஸ்வினுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அவரால் இந்திய அணியினருடன் சேர்ந்து லண்டனுக்கு பயணம் செய்ய முடியவில்லை. ஆனால், அவர் ஜூலை 1 ஆம் தேதிக்குள் குணமடைந்து டெஸ்டில் கலந்துக்கொள்வாரென நம்புகிறோம். இருந்தாலும் அவர் பயிற்சி ஆட்டத்தில் கலந்துக் கொள்ளமாட்டார்” என பிசிசிஐ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.