உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முந்தைய கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணியை வீழ்த்தியது.
நியூஸிலாந்தின் ராங்கியோரா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் அடித்தது. அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களே எடுத்தது. இந்த ஆட்டத்தில் இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் விளாசி அசத்தினாா்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது தலையில் பந்து பட்டத்தில் காது பகுதியில் ஸ்மிருதி காயம் கண்டிருந்தாா். இந்நிலையில் அந்த காயத்திலிருந்து மீண்டு அவா் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, உலகக் கோப்பை போட்டி தருணத்தில் இந்தியாவுக்கு பலம் சோ்ப்பதாக அமைந்துள்ளது.
மகளிருக்கான ஒன் டே உலகக் கோப்பை போட்டி வரும் 4-ஆம் தேதி நியூஸிலாந்தில் தொடங்குகிறது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 6-ஆம் தேதி சந்திக்கிறது.