இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் 28 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து 89.4 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி கடைசி விக்கெட் பாட்னர்ஷிப்புக்கு 90 ரன்கள் சேர்த்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்த அணியும் பேட்டிங்கில் சொதப்ப 128 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகள் இழந்து திணறியது.
இதையும் படிக்க | டெஸ்ட் தொடரை வென்றது ஆஸி.
விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டி சில்வா நிதானம் காட்டி நம்பிக்கையளிக்க டெயிலண்டர்கள் அவருக்கு ஒத்துழைப்பு தந்தனர். அல்சாரி ஜோசஃப் அவருடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்து 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கெமார் ரோச்சும் நிதானம் காட்ட ஜோஷ்வா டி சில்வா அரைசதத்தைக் கடந்தார். மேற்கிந்தியத் தீவுகளும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது.
2-ம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து 28 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஜோஷ்வா டி சில்வா 54 ரன்களுடனும், ரோச் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.