பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். சமூகவலைத்தளங்களில் ரசிகர்களும் பிரபலங்களும் சானியா மிர்சாவுக்கு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.
சமீபகாலமாக சானியா மிர்சாவுக்கும் அவருடைய கணவர் சோயிப் மாலிக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சானியாவுக்குச் சமூகவலைத்தளம் வழியாக பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார் சோயிப் மாலிக். இந்த நாளை நன்குக் கொண்டாடவும் என அவர் வாழ்த்தியுள்ளார்.
கடந்த நவம்பர் 8 அன்று இன்ஸ்டகிராமில் ஒரு பதிவு எழுதினார் சானியா மிர்சா. உடைந்த உள்ளங்கள் எங்குச் செல்லும், அல்லாவைத் தேடிச் செல்லும் என எழுதியிருந்தார். இதையடுத்து தன் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக்கை சானியா மிர்சா பிரியவுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து சோயிப் மாலிக் தன் மனைவிக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் 36 வயது சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் உலகளவில் நெ.1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. கடந்த வருடம் செப்டம்பரில் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றார்.