ராஜபட்ச அதிரடியால் மீண்ட இலங்கை, பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு

ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
ராஜபட்ச அதிரடியால் மீண்ட இலங்கை, பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு
Published on
Updated on
1 min read

ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் இறுதிப் போட்டி துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இலங்கை அணி முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இலங்கை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா முதல் ஓவரை வீசினார். அவரது முதல் ஓவரிலேயே குஷால் மெண்டிஸ் போல்டாகி அதிர்ச்சியளித்தார். அதன்பின், பதும் நிசங்கா 8 ரன்களிலும், குணத்திலகா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இலங்கை அணியின் தனஞ்ஜெயா டி சில்வா சிறப்பாக விளையாடி ஒரு சில பவுண்டரிகளை விரட்டினாலும் அவர் இஃப்டிஹார் அகமது பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 21 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா 2 ரன்களில் ஷதாப் கான் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த பனுகா ராஜபட்ச மற்றும் வனிந்து ஹசரங்கா இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி அதிரடி காட்ட இலங்கை அணியின் ரன்கள் உயர்ந்தன. இருப்பினும், வனிந்து ஹசரங்கா 21 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் ராஜபட்சவுடன் ஜோடி சேர்ந்தார் சமிகா கருணாரத்னே.

ஒருபுறம் ராஜபட்ச அதிரடி காட்ட அவருக்கு உறுதுணையாக விக்கெட்டினை இழக்காமல் கருணாரத்னே சிறப்பாக பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சினை எதிர்கொண்டார். அதிரடியாக விளையாடிய பனுகா ராஜபட்ச 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ராஜபட்சவின் அதிரடி ஆட்டத்தால் விக்கெட்டுகளை இழந்து சரிவிலிருந்த இலங்கை இறுதிப் போட்டியில் வெற்றி பெற போராடுவதற்கு தேவையான ஸ்கோரை குவித்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்குகிறது பாகிஸ்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com