ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் போட்டியின் 13வது ஆட்டம் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஜெய்ஸ்வால் 6 பந்துகளில் வெளியேற அதற்கடுத்து வந்த படிக்கல், ஜோஸ் பட்லருடன் நிலைத்து ஆடினார். இதனால் படிக்கல் 29 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். அதனைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 8 ரன்களில் வெளியேற அதற்கடுத்து வந்த ஷிம்ரோன் ஹிட்மயர், பட்லருடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆரம்பம் முதலே நிலைத்து ஆடிவந்த ஜோஸ் பட்லர் அரை சதம் கடந்து அணியின் ரன் வேகத்தைக் கூட்டினார். அவர் 47 பந்துகளில் 70 ரன்களைக் குவித்தார். ஹிட்மயர் 31 பந்துகளுக்கு 42 ரன்களை சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. இதனால் பெங்களூரு அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.