40 வயது வங்கதேச முன்னாள் வீரர் மொஷரஃப் ஹுசைன், மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.
2008-ல் வங்கதேச அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார் மொஷரஃப் ஹுசைன். கடைசியாக 2016-ல் விளையாடினார். 5 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றார். 2008-ல் விளையாடிய பிறகு 8 ஆண்டுகள் கழித்து வங்கதேச அணியில் மீண்டும் இடம்பெற்றார் மொஷரஃப் ஹுசைன். வேறு எந்த வங்கதேச வீரரும் இத்தனை நாள் இடைவெளியில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெற்றதில்லை.
இடக்கைச் சுழற்பந்துவீச்சாளரான மொஷரஃப் ஹுசைன், 2019-ல் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் நவம்பர் 2020-ல் மூளைப் புற்றுநோயால் மீண்டும் பாதிப்புக்கு ஆளானார். இதையடுத்து தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
மொஷரஃப் ஹுசைனின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.