சென்னை செஸ் ஒலிம்பியாட் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வெல்ல கடுமையான போட்டி நடைபெறுகிறது.
ஓபன் பிரிவில் தலா 17 புள்ளிகளுடன் உஸ்பெகிஸ்தான், அர்மீனியா ஆகிய அணிகள் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியா பி, இந்தியா ஏ, அமெரிக்கா ஆகிய அணிகள் தலா 16 புள்ளிகளுடன் 3,4,5 இடங்களை முறையே பிடித்துள்ளன.
இன்று நடைபெற்று வரும் இறுதிச்சுற்றில் இந்தியா பி அணி ஜெர்மனியையும் இந்தியா ஏ அணி பிரபல வீரர்களைக் கொண்ட அமெரிக்காவையும் எதிர்கொள்கின்றன. உஸ்பெகிஸ்தான் நெதர்லாந்தையும் அர்மீனியா ஸ்பெயினையும் எதிர்கொள்கின்றன.
நம்மூரைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகிய வீரர்களைக் கொண்ட இந்தியா பி அணி தங்கம் வெல்ல வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?
முதலில் ஜெர்மனியை இந்திய பி அணி தோற்கடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் உஸ்பெகிஸ்தானும் அர்மீனியாவும் தோல்வியடைய வேண்டும். இது நடந்தால் இந்திய பி அணி தங்கம் வெல்ல முடியும். இந்திய ஏ அணி அமெரிக்காவை வீழ்த்தினால் வெள்ளியோ வெண்கலமோ பெற முடியும்.