பிசிசிஐ கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் செயலாளர் அமிதாப் செளத்ரி இன்று காலமானார். அவருக்கு வயது 62.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு, பிசிசிஐ அமைப்பை 2017 முதல் 2019 வரை நிர்வகித்து வந்தது. அப்போது பிசிசிஐயின் செயலாளராகப் பணியாற்றியவர் அமிதாப் செளத்ரி. ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். அவருடைய காலக்கட்டத்தில் தான் ராஞ்சியில் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கான மைதானம் கட்டப்பட்டது. 2005-ல் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய அணியின் மேலாளராகவும் 2013 முதல் 2015 வரை பிசிசிசியின் செயலாளராகவும் பணியாற்றி கிரிக்கெட் நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் பெற்றிருந்தார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அமிதாப் செளத்ரி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக 2 ஆண்டுகள் பணியாற்றி விட்டு கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக அமிதாப் செளத்ரி இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.