பிசிசிஐயின் சார்பில் நடத்தப்படும் துலீப் கோப்பைப் போட்டி இந்த வருடம் தமிழக நகரங்களில் நடைபெறவுள்ளது.
மண்டலங்களுக்கு இடையிலான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 8 முதல் 25 வரை நடைபெறவுள்ளது. வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம், மத்திய மண்டலம் என ஆறு அணிகள் பங்கேற்கும் இப்போட்டி இந்த வருடம் சென்னை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் எனத் தமிழக நகரங்களில் நடைபெறவுள்ளது.
வட இந்தியாவில் செப்டம்பர் மாதம் மழை அதிகமாக பெய்யும் என்பதால் இந்தமுறை தமிழக நகரங்களில் இப்போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது. முதல் ஆட்டம் சென்னையிலும் அரையிறுதி ஆட்டங்கள் சேலத்திலும் இறுதிச்சுற்று கோவையிலும் நடைபெறவுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் போட்டியின் சில ஆட்டங்கள் கோவை, சேலத்தில் நடைபெற்றதால் இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.