வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பையில் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் மோதின.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது ஆப்கானிஸ்தான்.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சசாய் மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் களமிறங்கினர். சசாய் 23 ரன்களும், குர்பாஸ் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, இப்ராஹிம் மற்றும் கேப்டன் முகமது நபி ஜோடி சேர்ந்தனர். கேப்டன் முகமது நபி நீண்ட நேரம் நிலைத்து களத்தில் இருக்க முடியவில்லை. அவர் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின் இப்ராஹிம் மற்றும் நஜிபுல்லா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. சிறப்பாக விளையாடிய இருவரும் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். நஜிபுல்லா 43 ரன்களுடனும், இப்ராஹிம் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தியது.
ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்திருந்த ஆப்கானிஸ்தான் இன்று தனது 2வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.