இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 409 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது.
இந்திய அணியின் சார்பில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். அவர் 131 பந்துகளில் 210 ரன்கள் குவித்தார். விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். அவர் 91 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார்.
இதையும் படிக்க: இவரா ஹிமாசலின் அடுத்த முதல்வர்?
இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்மியது வங்கதேசம். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அனமுல் ஹாக் மற்றும் கேப்டன் லிட்டன் தாஸ் களமிறங்கினர். அனமுல் 8 ரன்களிலும், கேப்டன் லிட்டன் தாஸ் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர், ஷகீப்-அல்-ஹசன் மற்றும் முஷ்பிக்குர் ரஹீம் களமிறங்கினர். ரஹீம் நீண்ட நேரம் களத்தில் நீடிக்க முடியவில்லை. அவர் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷகீப் மற்றும் யாசிர் அலி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரினை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும், ஷகீப் 43 ரன்களிலும், யாசிர் அலி 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வங்கதேச வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 34 ஓவர்களின் முடிவில் 182 ரன்களுக்கு வங்கதேசம் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை வங்கதேசத்திடம் நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.