பிபிஎல் டி20 போட்டியில் சிட்னி தண்டர் அணி 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்துள்ளது.
சிட்னியில் நடைபெற்ற பிபிஎல் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணி, முதல் ஓவரிலிருந்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. 5.5 ஓவர்களில் அதாவது 35 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் 15 ரன்களுக்கு இழந்து பெரிய தோல்வியைச் சந்தித்தது. ஹென்றி தார்ன்டன் 5 விக்கெட்டுகளையும் வேஸ் அகர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 5 பேட்டர்கள் டக் அவுட் ஆனார்கள். சிட்னி பேட்டர் டாக்கெட் அதிகபட்சமாக 4 ரன்கள் எடுத்தார்.
டி20 கிரிக்கெட்டில் வேறு எந்த அணியும் இதுபோல குறைந்த ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததில்லை. இதற்கு முன்பு 2019-ல் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் துருக்கி அணி, செக் குடியரசுக்கு எதிராக 21 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது டி20 வரலாற்றில் குறைந்த ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அணியாக சிட்னி தண்டர் உள்ளது.