முழு உருவ கட் அவுட் வைத்த கேரள ரசிகர்களின் அன்பிற்கு பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மர் நன்றி தெரிவித்துள்ளார்.
பிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன.
இதையும் படிக்க | உலகக் கோப்பை: சாதிப்பார்களா சதுரங்கச் சட்டைக்காரர்கள்?
கால்பந்து போட்டி தொடங்கியதிலிருந்தே கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர்கள் வீரர்களின் உருவப்படங்களை சினிமா நடிகர்களுக்கு இணையாக வைத்துக் கொண்டாடினர். பிரபல கால்பந்து வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் என பலரும் கேரள ரசிகர்களின் கட்அவுட்களில் இடம்பெற்றனர்.
இந்நிலையில் கேரளத்தில் தனக்கு கட் அவுட் வைக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்து, “உலகில் உள்ள அனைத்திலும் அன்பு இருக்கிறது.மிக்க நன்றி, கேரளம், இந்தியா” என நெய்மர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தில் நெய்மரின் கட் அவுட்டுடன் தந்தையும், அவரது குழந்தையும் நெய்மர் பெயர் பொறித்த ஆடையுடன் இருந்தனர்.
நெய்மரின் இந்தப் பதிவை கேரள கால்பந்து ரசிகர்கள் இணையத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் நெய்மர் இடம்பெற்ற பிரேசில் அணி காலிறுதியில் குரோஷியா உடனான போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.