ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் 590 வீரர்களின் பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ
By DIN | Published On : 01st February 2022 03:16 PM | Last Updated : 01st February 2022 03:16 PM | அ+அ அ- |

தீபக் சஹார் (சிஎஸ்கே)
ஐபிஎல் 2022 போட்டிக்காக ஏலத்தில் பங்கேற்கும் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.
ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ஐபிஎல் 2022 ஏலத்தில் 590 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். தற்போது 44 புதிய பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவர்களில் ஒருவர் இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர். (ஆனால் அவரால் இந்த வருடப் போட்டியில் இடம்பெற முடியாது)
ஏலப் பட்டியலில் உள்ள 590 வீரர்களில் 228 சர்வதேச வீரர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத 355 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப் பட்டியலில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள்.
48 வீரர்களின் அடிப்படை விலை தலா ரூ. 2 கோடியாக உள்ளது. ரூ. 1.50 கோடி அடிப்படை விலையை 20 வீரர்களும் ரூ. 1 கோடி அடிப்படை விலையை 34 வீரர்களும் தேர்வு செய்துள்ளார்கள்.
2021 ஐபிஎல் போட்டி கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் முதல் பாதியும் அதன்பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்றது. இந்த வருடம் இந்தியாவில் ஐபிஎல் போட்டியை நடத்தவே பிசிசிஐ விரும்புகிறது. எனினும் கரோனா பாதிப்பு குறையாவிட்டால் இந்தியாவில் நடத்துவதற்குப் பதிலாக மீண்டும் வெளிநாட்டில் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.