ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்துக்காக இந்திய அணிக்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் கேப் டவுனில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குயிண்ட டி காக் 124, வான் டெர் டுசென் 52 ரன்கள் எடுத்தார்கள். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு விளையாடிய இந்திய அணி, 49.2 ஓவர்களில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதோடு, ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது. ஷிகர் தவன் 61, கோலி 65, தீபக் சஹார் 54 ரன்கள் எடுத்தார்கள். சதமடித்த குயிண்டன் டி காக் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வானார்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது இந்திய அணி. குறிப்பிட்ட நேரத்துக்கு 2 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தார்கள். இதனால் இந்திய அணிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 40% அபராதம் விதித்துள்ளது ஐசிசி.