அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்றுள்ளது நியூசிலாந்து அணி.
நியூசிலாந்து அணி அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டப்லினில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அயர்லாந்து அணி அபாரமாக பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. ஹேரி டெக்டர் 113 ரன்கள் எடுத்து அசத்தினார்.
நியூசிலாந்து அணி, 29.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களுடன் தடுமாறியது. 7-ம் நிலை வீரராகக் களமிறங்கிய பிரேஸ்வெல், அபாரமாக விளையாடி சரிவிலிருந்து அணியை மீட்டெடுத்தார். 74 பந்துகளில் சதமடித்தார். கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்து பரபரப்பான முறையில் நியூசிலாந்து அணிக்கு வெற்றியை அளித்து ஆட்ட நாயகன் விருதை பிரேஸ்வெல் வென்றார். அவர் 82 பந்துகளில் 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 50-வது ஓவரில் இதுவரை எந்த ஒரு அணியும் 20 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதில்லை. நியூசிலாந்து அணி முதல்முறையாக இதை நிகழ்த்தியுள்ளது.