செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளைப் பாராட்டி ஸ்பெயினைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் ஃபிரான்சிஸ்கோ ட்வீட் வெளியிட்டுள்ளார்.
உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), ஏஐசிஎஃப், தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் கௌரவமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்றன. சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். இப்போட்டிக்கு ரூ.120 கோடியை ஒதுக்கி உள்ளது தமிழக அரசு.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை (ஜூலை 28) நடைபெறவுள்ள சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறாா்கள்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் ஃபிரான்சிஸ்கோ, ட்விட்டரில் தெரிவித்ததாவது:
சென்னையில் உள்ள தங்கும் விடுதிக்கு இப்போதுதான் வந்தேன். காலை 5 மணி. ஏதாவது புகார் சொல்லலாம் என இருந்தேன். ஹா..ஹா... இதுவரை எல்லாமே அற்புதமான உள்ளன. தன்னார்வலர்களும் பணியாளர்களும் அருமையான வரவேற்பு அளித்தார்கள். விமான நிலையத்தில் ஒலிம்பியாட் போட்டிக்கென தனி ஏற்பாடுகள் உள்ளன. விரைவாக வெளியேற முடிந்தது. தங்கும் விடுதியிலும் இதுவரையில்லாத அளவுக்கு விரைவாக அறைகள் ஒதுக்கப்பட்டன. இங்கு வந்திருப்பதில் மகிழ்கிறேன். என்னுடைய 10-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நான் நல்லமுறையில் அனுபவிக்க வேண்டும் என்றால் ஆட்டத்தில் தவறுகள் எதுவும் செய்துவிடக் கூடாது என்றார்.