இந்திய கிரிக்கெட் அணியின் மனநலப் பயிற்சியாளராக பேடி உப்டன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் மனநலப் பயிற்சியாளராக பேடி உப்டன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து அவர் பணியாற்றவுள்ளார்.
53 வயது உப்டன், இந்திய அணியின் மனநலப் பயிற்சியாளராக 2008 முதல் 2011 வரை பணியாற்றியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் தான் இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. 2013-ல் அவர் கேரி கிரிஸ்டனுடன் இணைந்து தென்னாப்பிரிக்க அணியில் பணியாற்றியபோது அந்த அணி நெ.1 டெஸ்ட் அணியாக முன்னேறியது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் உற்சாகமாகவும் மனநலப் பாதிப்புகள் எதுவும் இன்றி விளையாட வேண்டும் என்பதற்காக அவரை மீண்டும் அழைத்துள்ளது பிசிசிஐ.