
ரஞ்சி கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்கு மும்பை, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
உத்தரகண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பைக் காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி, 725 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. காலிறுதி ஆட்டத்தை வெற்றி பெற உத்தரகண்ட் அணிக்கு 795 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 27.5 ஓவர்களில் 69 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் மும்பை அணி காலிறுதி ஆட்டத்தை 725 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதல்தர கிரிக்கெட்டில் 725 ரன்கள் வித்தியாசத்தில் ஓர் அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.
கர்நாடகத்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை உத்தரப் பிரதேச அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கர்நாடக அணி, 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. உத்தரப் பிரதேச அணி, 65.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் கரண் சர்மா 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை மத்தியப் பிரதேச அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி 2-வது இன்னிங்ஸில் 5.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்கால் - ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் இன்னும் முடியவில்லை. 4-ம் நாள் இறுதியில் பெங்கால் அணி 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 551 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பெங்கால் அணியால் கடைசி நாளில் வெற்றி பெற முடியாமல் போனாலும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் அந்த அணி தான் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
அரையிறுதிச் சுற்றில் மோதும் அணிகள்
மும்பை vs உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம் vs பெங்கால்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.