அயர்லாந்து டி20 தொடர்: இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் நியமனம்

பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 
அயர்லாந்து டி20 தொடர்: இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் நியமனம்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்பிறகு இந்திய அணி அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் சுற்றுப்பயணம் செய்கிறது. அயர்லாந்தில் ஜூன் 26, 28 தேதிகளில் இரு டி20 ஆட்டங்களை விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இந்த வருடம் நடைபெறுகிறது.

இங்கிலாந்தில் ஜூன் 24-27 தேதிகளில் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதனால் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் டெஸ்ட் வீரர்களால் பங்கேற்க முடியாது.

இதையடுத்து அயர்லாந்து டி20 தொடருக்கான புதிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியின் (என்சிஏ) இயக்குநராக லக்‌ஷ்மண் தற்போது பணியாற்றி வருகிறார். மேலும் என்சிஏ-வில் பயிற்சியாளர்களாக உள்ள கொடாக், சைராஜ் பஹுதுலே, முனிஷ் பாலி ஆகியோர் இந்திய அணியின் கூடுதல் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கொடாக் பேட்டிங் பயிற்சியாளராகவும் சைராஜ் பஹுதுலே பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் முனிஷ் பாலி ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றவுள்ளார்கள்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com